அவர் ஒரு சரித்திரம் 003:
அவர் ஒரு சரித்திரம் 003:
தங்கை மீது மட்டற்ற பாசத்தை வெளிப்படுத்தும் வேடம் என்றால் நடிகர் திலகத்தை மிஞ்ச வேறு எந்த நடிகரும் கிடையாது. அண்ணன் ஒரு கோயில், தங்கை, தங்கைக்காக போன்ற படங்களில் அவர் இத்தகைய வேடங்களை சிறப்பாக செய்திருந்தாலும் இவற்றிற்க்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல் அமைந்த படம் பாசமலர். சிறு வயது முதலே தங்கைக்கு தாயாகவும் தந்தையாகவும் இருந்து பாசத்துடன் வளர்த்து, தங்கையே தனது உலகம் என்று வாழ்ந்திருந்தவருக்கு, சூழ்நிலையின் காரணாமாக தங்கையை பார்க்க முடியாமல் போய்விடுகிறது. அப்போது இருவரும் ஒருவரை எண்ணி மற்றொருவர், அவர்கள் தன் மீது எவ்வளவு பாசத்துடன் இருந்தனர் என்பதை தனது குழந்தைகளிடம் கூறுமாறு அமைந்த பாடல். பார்ப்பவர்களின் கண்களில் நீரை வரவழைத்து விடும்.
"யானைப் படை கொண்டு சேனை பல வென்று" என்று பாடும்போது இளவரசனாக வாழப் பிறந்தவன் நீ, அத்தையின் மகளை மணம்புரிந்து சீரும் சிறப்புடனும் வாழவேண்டியவன் என்று சிவாஜி ஆற்றாமையை பாடும்போது நமது மனம் வலிக்கின்றது.
"தங்கக் கடியாரம்" என்று பாடும்போது, உனது மாமன் உனக்காக இந்த உலகத்தையே சீராக அளிப்பார் என்ற பெருமிதம் சாவித்திரியின் நடிப்பில்.
"கண்ணின் மணி போல மணியின் நிழல் போல" என்ற வரிகளில் மேன்மையான அண்ணன் தங்கை உறவு பளிச்சிடுகிறது. "மண்ணும் கடல் வானும்" என்ன அற்புதமான வரிகள். இயற்கை கூட தங்கள் உறவைப் பிரித்து விட முடியாது என்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை.

அண்ணன் தங்கை பாசத்துக்கு இது வரை இந்தப் படத்தை மிஞ்ச வேறு படம் வரவே இல்லை என்பதே உண்மை. இப்பாடலை காணும் ஒவ்வொருவரும் இதுபோல் தங்களுக்கும் ஒரு சகோதரனோ சகோதரியோ இருக்க வேண்டும் என்று விரும்புவர்.
நீங்களும் இந்தப் பாடலை கேட்டு ரசியுங்கள்.
https://www.youtube.com/watch?v=R9zT_GGGL7M
Comments
Post a Comment