அவர் ஒரு சரித்திரம் - 1


அன்பும் பண்பும் நிறைந்த சிவாஜி ரசிகர்களுக்கு, வணக்கங்கள் பல.நமது நடிகர் திலகத்தின் நடிப்பை நாம் ஒவ்வொரு அணுவும் ரசித்து பலமுறை ருசித்து வந்துள்ளோம். இருந்தாலும் மீண்டும் மீண்டும் அவற்றை அசை போடுவதில் நமக்கு எப்போதும் தணியாத தாகமே. அவரைப் பற்றியும், அவரது நடிப்பைப் பற்றியும் நான் ரசித்தவாறு "அவர் ஒரு சரித்திரம்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுத உள்ளேன். குறைந்தது 100 தொடர்களாவது எழுத அவா. நடிகர் திலகத்தின் ஆசிகளுடன் அதை சாதிப்பேன் என்று நம்புகிறேன். முதல் பதிவு அவரைப் பற்றிய ஒரு சிறு நினைவு கூறல். தொடரும் பதிவுகள் அவர் ஏற்ற பாத்திரங்களின் சிறப்பைப் பற்றியது. அனைவரும் ரசித்து இன்புறுவீர்கள் என நம்பிக்கையுடன் துவங்குகிறேன்.

அவர் ஒரு சரித்திரம்: 1 

தமிழகத்திலும், தமிழ் பேசும் நாடுகளிலும், தமிழுணர்வு, தமிழ் பாரம்பரியம் பற்றிய சிந்தையில் முக்கிய இடம் வகித்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் பலரை நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜிகணேசனே.

காப்பிய பாத்திரங்கள் - கர்ணன், பரதன்; சமய பாத்திரங்கள் - அப்பர்; அரசியற் பாத்திரங்கள் - இராஜராஜன், கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார். சிவாஜியின் மூலமாகவே நாம் இந்தப் பாத்திரங்களைக் கண்டோம். அவர்களை மனிதர்களாகச் சந்தித்தோம். அந்த நடிகன் மூலமாகவே நாம் தமிழனின் அசாதாரணத் திறன்களைக் கற்பனை செய்தோம், கண்முன் நிறுத்தினோம்.

பாத்திரங்களை சித்தரிக்கும் தன்மையிலும் சிவாஜியின் சாதனை மிகப் பெரியது. மிக மேலோட்டமாகப் பார்த்தாலே இந்த உண்மை புலனாகும். பாசமலர், படிக்காத மேதை, பாகப்பிரிவினை, மங்கையர் திலகம், தங்கப்பதக்கம், வசந்தமாளிகை, முதல்மரியாதை, தேவர் மகன் முதலிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரங்களின் (சிவாஜி சித்தரித்தவை) நிலைகளைப் பார்த்தால் இந்த உண்மை நமக்கு புலப்படும். இந்த அம்சத்தைப் பற்றி சற்று உன்னிப்பாக ஆராய முனையும் பொழுதுதான், சிவாஜியின் நடிப்பு வரலாற்றின் ஒரு முக்கிய உண்மை தெரியவரும். சிவாஜி சித்தரித்த பாத்திரங்கள் பெரும்பாலும் துன்பத்தையேற்றுக் கொள்கின்றனவாக அமைந்தன என்பது தெரியும். 

சிவாஜிகணேசனுக்குள் இருந்த நடிப்புத் திறன் பிறர் இன்ப, துன்பங்களை தன் உணர்வு நிலைக்குள் உள்வாங்கிச் சித்தரிப்பவன் - 'நடிகனுக்கான சவால்' என்பது இந்தச் சித்தரிப்புக்குள் தான். தனது இந்தப் பணி நன்கு நிறைவேற அவரோடு உடன் நடிக்கும் மற்ற பாத்திரங்களின் பங்கும் முக்கியமாகும். இதனால், சிவாஜியோடு நடிக்கும் நடிகையர், துணைப் பாத்திரங்கள் மிக முக்கியமாகினர். தான் மதித்த நடிகையர் என பானுமதி, பத்மினி, சாவித்திரியின் பெயர்களை சிவாஜிகணேசன் எடுத்துக் கூறியுள்ளார். சிவாஜி கணேசனின் பெருந்தன்மை பிறரை நடிக்கவிட்டு தான் அதற்கு எதிர்மறையாற்றுவது. தானே பிரதானமாக இருக்க வேண்டும் என்று அவர் ஒரு போதும் எண்ணியது இல்லை.





இங்கு முக்கியமாக பார்க்க வேண்டுவது, சிவாஜியின் சமகாலத்தவர்களிலும் , சிவாஜியின் வருகைக்கு முன்னர் இருந்தவர்களே. தியாகராஜ பாகவதருக்குச் சிவாஜியை விட கவர்ச்சி இருந்தது. கே.ஆர். ராமசாமி 'வேலைக்காரி' மூலம் மிகப் பெரிய புகழை ஈட்டியிருந்தார். சிவாஜிக்கு முன்னர் வந்தவர்களுக்கும் சிவாஜிக்குமிருந்த முக்கிய வேறுபாடு, அவர்கள் பிரதானமாக பாடகர்களே (பாடகர்கள் அல்லாதவர்கள் பிரசித்தமடைவது 1950 களின் பின்னரே - எம்ஜிஆர், ஜெமினிகணேசன் முதலியோர்) சிவாஜி உச்சரிப்புச் செம்மையையே தனது பிரதான ஆஸ்தியாகக் கொண்டிருந்தார்.

சிவாஜியின் நடிப்பு அங்க அசைவுகளில் மாத்திரம் நம்பியிருக்கவில்லை. அது அவரது தெளிவான வசன உச்சரிப்பிலும் இருந்தது. அரங்கில் பாட்டுப் போய் வசனம் முக்கியமான காலம். கதையிலும் வசனத்துக்கு முக்கியத்துவம் வரத்தொடங்கிய காலம். சினிமாவுக்குள் இந்தப் போக்கை ஸ்திரப்படுத்திய பாரசக்தி மூலம் சிவாஜிகணேசன் அறிமுகமானார். தமிழ்ச் சினிமாவில் நடிப்பு, இப்படத்துடன் ஒரு புதிய பரிமாணத்தை பெறுகின்றனது.

சிவாஜிகணேசனின் இந்த வருகை இவரை மற்ற சினிமா நாயகர்களிலிருந்து வேறுபடுத்துகின்றது.நாடக மரபின் நாயகராக இருந்த சிவாஜிகணேசன், சினிமாவுக்கேற்ற நடிப்பின் சக்கரவர்த்தியானார். சிவாஜியின் சினிமா வாழ்க்கை தமிழ்ச் சினிமாவின் இந்த வரலாற்றுக் கட்டத்தை எடுத்துக் காட்டுகின்றது. சித்தரிப்பு திறனாலும், பல்வேறு பாத்திரத் தேர்வினாலும், நமது கலாச்சாரத்தின் ஒரு உருவமாகவே சிவாஜிகணேசன் என்ற வி.சி. கணேசன் திகழ்ந்தார்.

அவர் மறைவுதான் அவரின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்திற்று. தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் அன்றும், இன்றும், என்றும் சிவாஜிகணேசனுக்கு நிரந்தரமான இடமுண்டு. வாழ்க அவரது புகழ், வளர்க அவர் வளர்த்த கலை.
ஜெய்ஹிந்த்!
(சில குறிப்புகள் வலைத் தளத்திலிருந்து எடுக்கப் பட்டவை)

Comments

Popular posts from this blog

அவர் ஒரு சரித்திரம் - 004

அவர் ஒரு சரித்திரம் - 005.

அவர் ஒரு சரித்திரம் - 2